மயக்க மருந்தோடு அலையும் "பிச்சைக்காரர்கள்"?
புத்தளம் பிரதேசத்தில் 4 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத பெண்ணால் கடத்திச் செல்லப்பட்டதாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!
வட்ஸப் முதல் வாய்வழி வரை இந்த செய்தி தீயாய் பரவியது!
இளைஞர்கள், பொலிஸ், பள்ளிஜமாத் என எல்லோரும் உஷாராகி களத்தில் குதித்தனர்!
தேடும்பணி தீவிரமாகியது! ஏற்கனவே சம்பூரில் 4 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பாகியது!
தெருத்தெருவாக "யாசகம்" கேட்கும் பெண் ஒருவரே இந்த சிறுவனை கடத்தி சென்றதாக கூறப்பட்டது!
முஹம்மது ஹுசைன் என்பவரின் மகனான முஹம்மது பாதிர் என்னும் சிறுவனே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
யாசகம் கேட்பதற்காக வந்த பெண், சிறுவனை இறுக அணைத்து தூக்கிச் சென்றதாக குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மற்றுமொரு பெண் குறிப்பிட்டிருந்த நிலையில் யாசகம் வாங்க வந்ததாக கூறப்படும் பெண்மணியோடு சேர்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு (யாசகி) யுவதி, புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார், ஆறு விஷேட பொலிஸ் குழுக்கள் மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த சிறுவனை கொண்டு சென்ற போது பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவத்தில் குடும்பத்தவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது!
புதையல் ஒன்றை எடுப்பதற்காகவே குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது!
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் குழந்தைகளை மயக்கமடைய செய்யும் இனிப்பு வகைகளும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படியோ,
இதுபோன்று யாசகம் கேட்டு வருவோர் தொடர்பில் மிகுந்த அவதானமாய் இருப்பதுடன், பிள்ளைகள் விடயத்தில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment